Skip to main content

Command Palette

Search for a command to run...

காளியம்மாள்

Updated
1 min read

பெயருக்கும் அவருக்கும் இல்பொருள் உவமைதான். குணத்தில் குழந்தை, கள்ளமில்லா சிரிப்பு, இல்ல, மனதை கள்ளமிடும் சிரிப்பு. ஊர்க்காவல் தெய்வம் போல ஊரின் எல்லையிலேயே வாழ்ந்தார். அவரிலிருந்து நூறடியில் காளி கோயிலும் அடையாளத்திற்காக மட்டுமே இருந்தது.

நம்மைப் பார்த்தவுடன் முகத்திலுள்ள சுருக்கங்களுக்கு பலம் சேர்ப்பதுபோல அழுத்தமான சிரிப்பு. பெயரையோ, உறவையோ சொல்லி உரிமையாய் அழைப்பார். ஐம்பதைத் தாண்டிய வயதென்று யாரும் சொல்லிவிட முடியாது. வேப்பங்கன்றின் உயரமும், மெல்லிதான தன் தன்மைக்கேற்ற உருவமும்.

பிறந்தது ஊர் அம்பலத்தின் குடும்பத்தில், வாழ்ந்ததோ ஊரெல்லையிலுள்ள கூத்து மேடையில். மேளதாளம், ஆட்டம்பாட்டம், ஆள் அரவமில்லாமல் தனியே கிடந்த கூத்து மேடைக்கு காளியம்மாள்தான் துணை.

மனநலம் குன்றியவர். பசு பால் தருமென்று சொல்லும் பிறவிகளின் கண்களுக்கு.

உறவுகள் அவரை என்றும் மறந்ததில்லை, அனைத்து விசேஷங்களுக்கும் வந்துவிடுவார். “சாப்டியா, நான் சாப்டேன்” சந்தித்த அனைவருக்கும் மனதில் மறையாத அந்தக்குரல், எதிரொலித்துக்கொண்டே இருக்கும். குழந்தைகள் கன்னத்தில் கிள்ளி முத்தமும், கையில் தன்னாலியன்ற காசும். பிறந்தநாளென்றால் பத்தோ இருப்பதோ கண்டிப்பாய் கிடைக்கும் அவரிடமிருந்து.

ஓர் ஊர் முழுவதும் சொந்தமிருந்தும், தனிமையில், தனக்கு மட்டுமே கேட்கும்படி என்னதான் பேசிக்கொள்வாரோ? காற்றில்தான் ஒலி செல்கிறது, அறிவியல். காற்றில் செல்லும் ஒலிகளுடன் அவர் நடத்தும் உரையாடல்கள், குறிசொல்லியை நம்பும் கூட்டத்திற்கு புரியாமலே போனது.

“தந்தோசுக்கு கலியாணம் பண்ணலையா” கடைசியாக தூறலுக்கு முன் வரும் வேளையைப் போன்ற ஒரு நிழல்மிகு மாலைப் பொழுதில் மேற்கொண்ட உரையாடல். ஏனோ நொடிகளில் முடிந்தது.

மறதியில்லை, உறவுகள் தெரியும், எதையும் எதிர்பாராமல் கொடுக்கும் குணம் — அன்பும், பணமும், முகத்தில் என்றும் மாறாத சிரிப்பும். மனிதர்க்கு வேறென்ன வேண்டும்?

குழந்தையைப் போலவே தொட்டிலில் கடைசிப்பயணம். இன்றும் ஊர் எல்லையில்தான், காளி கோயிலிலிருந்து நூறடியில்.

More from this blog

மீட்சி..

பொழுது புலர்ந்து வெயில் சூடு கூட உடலில் தெரியவில்லை, குளிரென்றும் கூற முடியாது, காசிக்கு பீடிக்கட்டு தேவைப்பட்டது. முற்றத்திலுள்ள மாடுகளை அவிழ்த்துவிட்டு அறைக்குள் எதையோ வேகமாய் எடுக்க சென்றார். காசி — காசி விஸ்வநாதன் — ஒரே மகன் — கேட்டவுடன் கிடைக்கா...

May 30, 20252 min read

முடிவில்லா சூழல்

சின்னையாவிற்கு வாழ்க்கை கொண்டு சென்ற பாதை கரடுமுரடாக காட்சியளித்தாலும் அவரின் ஆருயிர் மனைவி தனலட்சுமியால் கற்கண்டாகவே அமைந்தது. பொருளாதாரம் மங்கிய வருடங்களவை. முத்து தஞ்சாவூரிலும், கடலூரிலும் ஓட்டல்கள் வைத்து காலூன்ற முயற்சி செய்து வந்தார். கணேசனும்,...

May 30, 20252 min read

கயற்றுக்கட்டிலும் காண்டஸாவும்

காற்றும் வெயிலும் காதல் செய்யும் பகல் நேரம், வெயில் லேசாகவும் காற்று சூடாகவும் வீசும். வெப்பக்காற்றேன்று பலர் வெளியில் செல்லத்தயங்கும் நேரம். கருப்பையா அதிலிருந்து தப்பிச்செல்ல ஒரு நேர்த்தியைக் கையாண்டார். வியர்த்த முகத்தை துடைப்பதில்லை, என்னதான் அனல...

May 30, 20252 min read
D

Dreamer

6 posts